Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கை, கால்களை கட்டி சாக்குப்பையில் வைத்து வாஷிங் மெஷினில் போட்டு குழந்தை கொடூர கொலை: சொத்து பிரச்னையில் பெண் வெறிச்செயல்

ராதாபுரம்: நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே ஆத்துக்குறிச்சி, கீழத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (28). இவரது மனைவி ரம்யா (25). இவர்களுக்கு 2ம் வகுப்பு படிக்கும் சுஜித் (6) என்ற மகனும், சஞ்சீவ் என்ற 3 வயது ஆண் குழந்தையும் உள்ளது. விக்னேஷ் தினக்கூலிக்கும், ரம்யா 100 நாள் வேலைத்திட்ட பணிக்கும் சென்று வருகின்றனர். நேற்று காலை 8 மணியளவில் ரம்யா வேலைக்குச் சென்றுள்ளார். சுஜித்தை பள்ளியில் விட்டு விட்டு திரும்பிய விக்னேஷ், வீட்டிற்குப் பின்புறம் தண்ணீர் எடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். காலை 9 மணியளவில் வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தை சஞ்சீவ், 9.30 மணியளவில் மாயமானான். எங்கு தேடியும் கிடைக்காததால், ராதாபுரம் காவல் நிலையத்தில் விக்னேஷ் புகார் அளித்தார். போலீசார் வந்து அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் விசாரணை நடத்தினர். அப்போது விக்னேஷ் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் தங்கம்மாள் (50) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் விக்னேஷ் குடும்பத்திற்கும், தங்கம்மாள் குடும்பத்திற்கும் சொத்துப் பிரச்னை இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் தங்கம்மாளின் வீட்டில் சோதனை செய்த போது 3 வயது குழந்தை சஞ்சீவை அங்குள்ள வாஷிங்மெஷினிலிருந்து சாக்குப்பையில் சடலமாக மீட்டனர். குழந்தையின் சடலத்தை பார்த்து பெற்றோரான விக்னேஷ், ரம்யா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது போலீசிடமிருந்த தப்ப முயன்ற தங்கம்மாளை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், தங்கம்மாள் குழந்தையின் கைகளையும், கால்களையும் கட்டி சாக்குமூட்டையில் சுற்றி வாஷிங் மெஷினில் போட்டதில் மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்துள்ளது. குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். காட்டிக்கொடுத்த குழி: சிறுவனை கொலை செய்த தங்கம்மாள் உடலை இரவில் யாருக்கும் தெரியாமல் புதைத்து விடலாம் என்று வீட்டின் பின்புறத்தில் தென்னை மரம் அருகில் குழி தோண்டி வைத்துள்ளார். காணவில்லை என புகார் வந்ததும் போலீசார் தங்கம்மாள் வீட்டில் தேடியபோது அங்கிருந்த குழி அவரை காட்டிக்கொடுத்துள்ளது.