சென்னை: காருக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில், போலீஸ்காரரை கத்தியால் குத்திய ரியல் எஸ்டேட் புரோக்கர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம், காரியப்பட்டி அருகே உள்ள திம்மாபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் 2ம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். வழியில், மதுரை விமான நிலையம் அருகே, மண்டேலா நகரில் உள்ள பெட்ரோல் பங்க் வாசல் முன்பு லக்கேஜூடன் இவர் நின்று கொண்டிருந்த போது, ரியல் எஸ்டேட் புரோக்கரான மதுரை பெருங்குடி அடுத்த சோளங்குருணியை சேர்ந்த ஆறுமுகம் (39) என்பவர், பெட்ரோல் பங்கில் இருந்து காரில் வெளியே வந்துள்ளார்.
அப்போது, கார் செல்வதற்கு வழிவிடும்படி ராஜ்குமாரிடம் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், கத்தியால் ராஜ்குமாரை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார். பலத்த காயமடைந்த ராஜ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். புகாரின்பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


