அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இரவு நேரங்களில் வெளியாட்கள் கஞ்சா, மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்வது அதிகரித்து வருகிறது என்று வியாபாரிகள் புகார்கள் தெரிவித்தனர். குறிப்பாக செல்போன், பைக் திருட்டு அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்தனர். இவற்றை தடுக்க இரவு ரோந்தில் போலீசார் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணைத் தலைவர் முத்துராஜ் கூறியதாவது;
கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இரவு நேரங்களில் வெளிநபர்கள் வந்து கஞ்சா, மது அருந்தி அட்டகாசம் செய்துவருவதால் வியாபாரிகள், பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வியாபாரிகளை பாதுகாக்கும் வகையில் சென்னை புறநகர் காவல் நிலையம் பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது ஒரு பிரயோஜனமும் இல்லாமல் உள்ளது. எனவே இனிமேலாவது இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வெளிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறினார்.


