செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே உறவினர் வீட்டு விசேஷத்திற்காக வெளிநாடு சென்றபோது பூட்டியிருந்த தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிவிட்டு சென்றுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (40). இவர், மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 28ம் தேதி தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் சிங்கப்பூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சென்றுள்ளார். இந்நிலையில், 10 நாட்களுக்கு பிறகு நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பினார்.
பின்னர், வீட்டிற்கு சென்று பார்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த 15 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. உடனே இதுகுறித்து கதிர்வேல் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அக்கம்பக்கத்தில் விசாரணை மேற்கொண்டு அந்த வீட்டினை ஆய்வு செய்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
