சென்னை: சென்னை, கலைவாணர் அரங்கில், தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கைவினைப் பொருட்கள் மற்றும் கைவினைஞர்களின் திறனை உலக அளவில் பிரபலப்படுத்தும் விதமாக மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, விருதுகளை வழங்கினார். தஞ்சாவூர் ஓவியம், சுடு களிமண், களிமண் பானை வகைகள், கலம்காரி, மூங்கில் வேலைப்பாடுகள், நார் பொருட்கள், தஞ்சாவூர் ஓவியம், தோடா சித்திர தையல் பொருட்கள், வாழைநார் பொருட்கள், குறும்பா ஓவியம், மர சிற்பங்கள், கற்சிற்பம் போன்ற பல்வேறு கலைப் பொருட்களின் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
2025-26ம் ஆண்டிற்கான ”வாழும் கைவினைப் பொக்கிஷம்” விருதுகளை - நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த குளுந்தான் (பித்தளை கலைப் பொருட்கள்), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (இசைக்கருவி- வீணை) மற்றும் ரெத்தினம் (தஞ்சாவூர் கலைத்தட்டு), சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் (இசைக்கருவி -சீர்யாழ்) மற்றும் இந்திரா (தஞ்சாவூர் ஓவியம்), செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணியம் (கற்சிற்பம்) மற்றும் திருமூர்த்தி (மரச்சிற்பம்), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பால்ராஜ் (மரச்சிற்ப உட்பதிப்பு),
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சங்கீதம் (மரச்சிற்பம்), கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (கோயில் நகைகள்) ஆகிய 10 விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதல்வர், வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்கான தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம், தாமிரப்பட்டயம் மற்றும் தகுதிச்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
2025-26-ம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதுகளை - தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் (பஞ்சலோக சிற்பம்), சங்கீதா (தஞ்சாவூர் ஓவியம்) மற்றும் பாபு (தஞ்சாவூர் கலைத்தட்டு), விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரீடா (உலோக தகட்டு வேலை) மற்றும் ஷபானா (சுடுகளிமண் சிற்பம்), மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (மரச்சிற்பம்), செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ் (கற்சிற்பம்),
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கவ்வாபீவி (பாய் நெசவு) கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செலின் மேரி (சித்திரத்தையல்) மற்றும் சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமார் (காகித கூழ் பொம்மைகள்) ஆகிய 10 விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பூம்புகார் மாநில விருதிற்கான தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 4 கிராம் தங்கப்பதக்கம், தாமிரப்பட்டயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.


