Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்க சதி; பாஜக மாநில தலைவர் பேசிய வீடியோவில் பகீர்: வழக்குபதிய கோரி 5 எதிர்க்கட்சிகள் போலீசில் புகார்

கவுகாத்தி: சட்டப்பேரவை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலில் உள்ள எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் பெயர்களைத் திட்டமிட்டு நீக்க முயற்சிப்பதாக அசாம் மாநில பாஜக தலைவர் மீது 5 கட்சிகள் கூட்டாகப் புகார் அளித்துள்ளன. அசாம் மாநிலத்தில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குத் தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ், மா.கம்யூ. உள்ளிட்ட 5 முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து, கவுகாத்தியில் உள்ள திஸ்பூர் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதியக்கோரி நேற்று புகார் அளித்தன.

அந்தப் புகாரில், ‘கடந்த 4ம் தேதி நடந்த காணொளி ஆலோசனைக் கூட்டத்தில், அசாம் மாநில பாஜக தலைவர் திலீப் சைகியா, சுமார் 60 தொகுதிகளில் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்களைக் கண்டறிய உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 5,000 முதல் 10,000 வரையிலான வாக்காளர்களைக் கணக்கெடுத்து, அவர்கள் பெயர்களைப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்’ என்று அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வாக்காளர்களை நீக்கும் இந்தப் பொறுப்பு மாநில அமைச்சர் அசோக் சிங்காலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள எதிர்க்கட்சியினர், இதுதொடர்பான வீடியோ ஆதாரங்கள் அழிக்கப்படும் முன் போலீசார் அவற்றைக் கைப்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விதிமுறைகளை மீறி இடமாற்றம் செய்யப்படுவதாகக் கூறித் தலைமைத் தேர்தல் அதிகாரியிடமும் அவர்கள் மனு அளித்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் பாஜக தலைவர் திலீப் சைகியா, ‘இது எதிர்க்கட்சிகளின் கற்பனையான குற்றச்சாட்டு; வழக்கமான நிர்வாக ஆலோசனைக் கூட்டத்தைத் திரித்துக் கூறுகிறார்கள். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 10ம் தேதிதான் வெளியாகவுள்ளது; சட்டரீதியாக இப்பிரச்னையை எதிர்கொள்வோம்’ என்று விளக்கம் அளித்துள்ளனர்.