கன்னிமாரா நூலகம் (அரிதான நூல்களின் பெட்டகம்)
நடுவில் மார்பு அளவிலான மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை வரவேற்கிறது. இதன் எதிரே நூல்களை என்ட்ரி போடும் மேஜையும், அதன் இருபுறமும் இரண்டு வழிப்பாதைகளும் உள்ளன. வழிகள் சிறிய மரத்தடுப்புகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு லோக்சபா, ராஜ்யசபா, தமிழ்நாடு சட்டசபையில் நடந்த விவாதங்கள் 1937ல் இருந்து இருக்கின்றன. தவிர, 1871ல் இருந்து இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பும், அரிதான புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.1689ல் சார்லஸ் என்பவரால் எழுதப்பட்ட ‘voyage of surat’, 1919ல் ரங்காசாரி எழுதிய ‘A Topographical list of inscriptions of the madras presidency’, வில்சன் எழுதிய ‘History of The Madras Army’ என பல அரிய நூல்கள் இங்கு உள்ளன. கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்ட மிக மிக அரிய நூல்களான 1578ல் ஹென்றிக்ஸ் அடிகளார் எழுதி அச்சில் ஏறிய முதல் தமிழ் நூலான, ‘தம்பிரான் வணக்கம்’, 1560ல் வெளியான பைபிள்போன்றவை மிக மிக அரிதானவை.இந்தப் பொது நூலகச் சிந்தனை 1890ல் ரெடியாகி இருந்தாலும் அதற்கு முன்பே மியூசியத்தின் உள்ளே ஒரு சின்ன லைப்ரரியை அமைத்திருந்தார் மியூசிய காப்பாளராக இருந்த கேப்டன் ஜீன் மிட்செல். 1861ல் லண்டன் ஹெய்லிபெர்ரி யுனிவர்சிட்டியில் இருந்து கொண்டு வந்த புத்தகங்களை வைத்துதான் இந்த குட்டி நூலகம் உருவானது. அதன் தொடர்ச்சியா உருவானதுதான் கன்னிமாரா நூலகம்.இரண்டாவது தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராட்டி போன்ற இந்திய மொழிகளில் வெளியான நாவல்கள், இலக்கியங்கள், கவிதைகள் எனப் பல்வேறு நூல்களை இங்கே வைத்துள்ளனர். அடுத்து மூன்றாவது தளம். இங்கே பள்ளி, கல்லூரிகளுக்கான பாடநூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.இந்நூலகம் தினமும் காலை 9 மணியிலிருந்து இரவு 7.30 வரையும், ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் மாலை 6 வரையும் செயல்படும்.
- பேராச்சி கண்ணன்