Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காங்கோவில் தீவிரமடைந்த எபோலா வைரஸ் பரவல்: பலி 999 ஆக உயர்வு!

கின்ஷாசா: கிழக்கு காங்கோவில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 999 ஆக உயர்ந்துள்ளது. ஜூலை 20 நிலவரப்படி, உறுதிசெய்யப்பட்ட 2,473 பாதிப்புகளில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக காங்கோ சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உண்மையான பலி எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

கடந்த மே 15 அன்று தொடங்கப்பட்ட இந்த எபோலா பரவல், முந்தைய பரவல்களை விட முற்றிலும் வித்தியாசமானது. இதற்கு 'புண்டிக்புக்யோ' (Bundibugyo) என்ற வைரஸ் வகையே காரணமாகும். இந்த வைரஸுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிறப்பான சிகிச்சை முறைகளோ இதுவரை இல்லை. இதன் காரணமாக, வரலாற்றிலேயே எந்தவொரு எபோலா பரவலையும் விட மிக அதிவேகமாக இது மக்களைப் பலிவாங்கி வருகிறது.

எபோலா என்பது ரத்தம், வாந்தி போன்ற மனிதர்களின் உடல் திரவங்கள், நோயாளிகள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூலமாகப் பரவக்கூடிய ஒரு கொடிய நோயாகும். இதன் வீரியம் மிகவும் அதிகம் என்பதால், தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் அதிகமாகவே உள்ளது.

நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்கு கிழக்கு காங்கோவில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இதுரி மாகாணம் உட்பட ஐந்து மாகாணங்களில் செயல்படும் கிளர்ச்சியாளர்களின் வன்முறை, தடுப்பு நடவடிக்கைகளைப் பெருமளவில் முடக்கியுள்ளது. மேலும், வதந்திகள் மற்றும் நம்பிக்கையின்மை காரணமாகச் சுகாதார மையங்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் மீது 12 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.