Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மோதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் வடகலை, தென்கலை இரண்டும் ஒரு காம்பில் உள்ள இரு இதழ்கள்: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தல்

சென்னை: வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்று இரு பிரிவினருக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள 18 திவ்யதேசங்களில் ஒன்றான சின்னகாஞ்சி விளக்கொளி பெருமாள் எனும் தீபப்பிரகாசர் கோயில் விழாக்களின்போது, கோயிலுக்கு வெளியில் தென்கலை மந்திரம் பாடவும், தென்கலை வாழி திருநாமம் பாடவும் அனுமதி மறுத்து கோயில் செயல் அலுவலர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, தென்கலை பிரிவைச் சேர்ந்த ரங்காச்சாரி, னிவாசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயிலில் தென்கலை மந்திரம் பாட அனுமதியளித்து 1915ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட முன்சீப் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, 1918ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையியல் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உயர் நீதிமன்றத்தை பயன்படுத்த முடியாது. தீர்ப்பை அமல்படுத்தக் கோரி சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம். எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார். மேலும், இந்த கோயில் விழாக்களின் போது வடகலை-தென்கலை பிரிவினர் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்ததால், விழாக்கள் அமைதியாக நடப்பதற்காகவே கோயில் செயல் அலுவலர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். வடகலை, தென்கலை இரண்டு பிரிவுகளும் ஒரு பூ காம்பின் இரு இதழ்கள். இரு பிரிவுகளும் பெருமாளுக்கு சொந்தமானவை. இரு பிரிவுகளின் குருமார்களும் பெருமாளின் பாத கமலத்தில் இளைப்பாறும் நிலையில், அவர்களின் சீடர்கள் குருக்களின் பெயரால் மோதல்களை தவிர்க்க வேண்டும். இரு பிரிவும் ஒன்று சேர்ந்து குருக்களின் பாதைக்கு கவுரவம் அளித்து நம்பிக்கை பாதையில் நடைபோட வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினார்.