Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் படுகொலைகளை கண்டித்து கம்யூனிஸ்ட்கள், விசிக சார்பில் வரும் 2ம்தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் படுகொலைகளை கண்டித்து, கம்யூனிஸ்ட்கள், விசிக சார்பில் வரும் 2ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ (எம்.எல்)லிபரேசன் மாநில செயலாளர் பழ.ஆசைதம்பி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசும், பாஜவின் சத்தீஸ்கர் மாநில அரசும் நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் மாவோயிஸ்டுகளை ஆயுதப் படைகளை கொண்டு தீவிரமாக அழித்து ஒழித்து வருகின்றன.

கடந்த 22ம் தேதி ஒரு நாள் மட்டும் 27 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சொன்ன பிறகும், ஒன்றிய, மாநில அரசுகள் அழித்தொழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவது வன்மையான கண்டத்திற்குரியது. மாவோயிஸ்டுகளின் வழிமுறைகளையும், ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களையும், நடைமுறைகளையும் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். ஆனால் மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர்கள் அனைவரையும் அழித்தொழிப்பது என்ற பயங்கரவாத செயல்களை அனுமதிக்க முடியாது. பாஜ அரசுகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறை நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

மாவோயிஸ்டுகள் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசும் சத்தீஸ்கர் மாநில அரசும் உடனடியாக கைவிட்டு அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இது எல்லாவற்றையும் விட மலையில் உள்ள வளங்களை தனியாருக்கு கொடுப்பதை உடனடியாக ஒன்றிய அரசும் சத்தீஸ்கர் மாநில அரசும் கைவிட வேண்டும். இதுவரை நடந்துள்ள போலி மோதல்கள் குறித்து முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 2ம்தேதி (திங்கட்கிழமை) சென்னையில் கூட்டாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானித்து இருக்கின்றன.