'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பின் கீழ் 3 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!
சென்னை: 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளுடன் தனித்தனியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கும் வகையில் திமுக சார்பில் 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பின் கீழ் ஒவ்வொரு தொகுதி வாரியாக தொகுதி நிர்வாகிகளை முதமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சந்தித்து நேர்காணலை நடத்தி வருகிறார். அந்த நிகழ்வின் போது ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள களநிலவரம் குறித்து அந்த தொகுதி நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறியக்கூடிய நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, வேதாரண்யம் மற்றும் பல்லாவரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். இதுவரை 37 நாட்களில் 79 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
