Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் ஆபாச பேச்சு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை: விழுப்புரம் மகளிர் கோர்ட் தீர்ப்பு

விழுப்புரம்: கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசிய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மலைகுப்பத்தை சேர்ந்தவர் சென்ராயன் மகன் தங்கவேல் (31). இவர் கடந்த 2021 ஜனவரி 5ம் தேதி செஞ்சி பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை தொடர்புகொண்டு தனது செல்போன் மூலம் நேரடியாக வீடியோ காலில் இணைய வைத்துள்ளார்.

அப்போது தன்னை ஒரு ஆன்லைன் பயிற்சி ஆசிரியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் தொடர்ந்து மாணவியிடம் ஆபாசமாக பேசி உள்ளார். இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து தங்கவேலை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி வினோதா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட தங்கவேலுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.45 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் இழப்பிட்டு தொகை வழங்கவும் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட தங்கவேல், போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.