Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொக்கைன் பயன்படுத்திய விவகாரம் நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு: சிறப்பு நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை

சென்னை: போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். போதைப்பொருள் கொக்கைன் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், போதைப் பொருள் சப்ளையரான கெவினிடம் நீண்ட காலமாகவே போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தியதும், அதை தனது நண்பர்களுக்கும் கிருஷ்ணா கொடுத்து பழக்கி வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி நடிகர் கிருஷ்ணா சென்னை போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னை தவறாக காவல்துறை கைது செய்துள்ளனர். நான் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

வழக்கிற்கு தொடர்புடைய எந்த போதைப் பொருட்களும் என்னிடம் இருந்து காவல்துறை கைப்பற்றவில்லை. நான் எந்த போதைப் பொருளும் பயன்படுத்தவில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரசாத் உள்ளிட்டோருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதேபோன்று நடிகர் ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. இந்த வழக்கு உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளேன். கெவின் என்பவருக்கும் எனக்கும் அண்மை காலங்களில் எந்த தொடர்பும் இல்லை.

கடந்த 2020ம் ஆண்டு பிறகு அவருடன் எந்த நட்பும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னரே அவரின் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து வெளியேறி விட்டேன். பழைய வாட்ஸ்அப் குரூப் பதிவுகளை வைத்து எனக்கு எதிராக காவல்துறை இந்த வழக்கை பதிவு செய்திருக்கிறது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனையும் நான் ஏற்க தயாராக இருக்கிறேன் என்று கோரி இருந்தார். இந்த மனு எண்ணிடப்பட்டு அடுத்த வாரத்திற்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.