கடலோர எல்லைகளை கண்காணிக்கும் வகையில் இன்று விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்: சி.எம்.எஸ்-03 செயற்கைக்கோளை நிலை நிறுத்த திட்டம், கவுன்ட்டவுன் தொடங்கியது; விஞ்ஞானிகள் கண்காணிப்பு
சென்னை: கடலோர எல்லைகளை கண்காணிக்கும் வகையில் ஜி.எஸ்.எல்.வி மார்க் - 03 (எல்.வி.எம் - 3) ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. கவுன்ட் டவுன் தொடங்கிய நிலையில் விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது.
அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்03 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் சந்திரயான்3 அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி மார்க் - 03 (எல்விஎம்-3) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 5.26 மணியளவில் விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுனட்டவுன் நேற்று மாலை தொடங்கியது.
இதனையொட்டி ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான ஒருங்கிணைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. அதனை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், செயற்கைக்கோளை நிறுவி ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. விண்ணில் செலுத்தப்பட்ட உள்ள சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் 4,400 கிலோ எடை கொண்டது.
இதுவரை புவிவட்ட பாதைக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் இதுவே அதிக எடை கொண்டதாகும். இதில் விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகள் உள்பட பல்வேறு நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய பாதுகாப்புத் துறையின் கண்காணிப்புப் பணிகளுக்காக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்திய கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதுடன், போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையே தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தவும் உதவும். எல்விஎம்-3 ராக்கெட்டின் 7வது ஏவுதல் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
* கடந்த 2013ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது
* அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்03 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது
