சீனாவில் இந்தியர்களுக்கு எதிரான கருத்து பதிவுகள் அதிகரிப்பு: இந்திய தூதரகம் நடத்திய கூட்டத்தில் புகார்
பீஜிங்: சீனாவில் இந்தியர்களுக்கு எதிரான கருத்து பதிவுகள் அதிகரித்து வருவது பற்றி இந்திய வம்சாவளியினர் கவலை தெரிவித்துள்ளனர். சீனாவுக்கான இந்திய தூதராக விக்ரம் துரைஸ்வாமி கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், சீனாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க கலந்தாய்வு கூட்டம் பீஜிங்கில் நடந்தது. இந்திய தூதரகம் நடத்திய இந்த நிகழ்வில் இந்தியத் தூதர் விக்ரம் துரைஸ்வாமி மற்றும் மூத்த தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற பலர் சீனாவில் சமூக ஊடகங்களில் இந்திய கலாசாரம், உணவுகள் மற்றும் இந்திய வெறுப்புகள் நிறைந்த பதிவுகள் அதிகரித்து வருவது பற்றி கவலை தெரிவித்தனர். மேலும் சீனா வழங்கும் பணி விசாக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வேலை தேடும் வாழ்க்கை துணைவர்களின் வேலைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறித்து புகார் தெரிவித்தனர்.
இந்திய தூதர் விக்ரம் துரைஸ்வாமி பேசுகையில், இது போன்ற இணைய உள்ளடக்கங்களின் அதிகரிப்பு குறித்து சீன அதிகாரிகள் அறிந்துள்ளனர். அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தூதரகம் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல் மூலம் சரிபார்க்கப்பட்ட, உண்மை அடிப்படையிலான தகவல்களைப் பரப்புவதன் மூலம் இதற்குப் பதிலளித்து வருகிறது. இந்திய சமூகத்திற்கான ஆதரவை மேம்படுத்தும் நோக்கில், சீனாவில் பணியிடம் தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்ளும் தொழில் வல்லுநர்களுக்கான சட்ட உதவி கட்டமைப்பை தூதரகம் உருவாக்கி வருகிறது என்றார்.


