சென்னை: தமிழ்நாட்டின் முதல் ஏசி ரயில் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு-கடற்கரை இடையே இன்று முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் முதன் முறையாக இன்று சென்னை கடற்கரை-செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே முதல் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில் சேவையை இயக்குகிறது. இதில் நவீன ரேக், தானியங்கி கதவுகள், பயணிகள் தகவல் அமைப்புகள், சிசிடிவி கேமராக்கள், நன்கு குறிக்கப்பட்ட நுழைவு, வெளியேறும் புள்ளிகள் போன்ற பயணிகளுக்கு சிறந்த வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது, முதல் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில் சேவை இன்று காலை 7 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து இயக்கப்படுகிறது.
அதன்படி குளிர்சாதன வசதி கொண்ட ரயில்எண் (49003, 49004) மற்றும் ரயில் எண் (49005, 49006) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - சென்னை கடற்கரை குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில் சேவைகள் ஞாயிற்றுக் கிழமைகள் தவிர இரு மார்க்கமாக இன்று முதல் இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு சென்னை கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில், பரனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு காலை 8.35 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையம் சென்றடையும் பின்னர் மறுமார்க்கமாக காலை 9 மணிக்கு புறப்பட்டு காலை 10.30 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.
அதேபோன்று சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.25 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும், மறுமார்க்கமாக 5.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்தடையும். மேலும் இரவு 7.35 மணிக்கு புறப்படும் ரயில் கூடுதலாக சேத்துபட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானிடோரியம் வழியாக இரவு 8.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


