Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை விமானநிலையத்தில் இலங்கை விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: 12 மணி நேர தாமதத்தால் பயணிகள் போராட்டம்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் நேற்று இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. பழுதுகளை சரிசெய்ய 12 மணி நேரம் தாமதம் ஆனதால், இலங்கை செல்ல வேண்டிய 252 பயணிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தில் இருந்து நேற்று காலை 9.45 மணியளவில் இலங்கையின் தலைநகர் கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் 252 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் என மொத்தம் 262 பேருடன் புறப்பட்டது. ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தபோது, திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.

பின்னர் புறப்பட்ட இடத்திற்கு கொண்டு வரப்பட்டு பழுது நீக்கும் பணி தொடங்கியது. சிறிய கோளாறு ஏற்பட்டுள்ளது. அதை 2 மணி நேரத்தில் சரிசெய்துவிடலாம் என்று கூறி பயணிகளை இறங்கி, விமானநிலைய ஓய்வறைகளில் தங்க வைத்தனர். எனினும், நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு மேலாகியும் விமானம் தயாராகாததால், ஓய்வறைகளில் தங்கியிருந்த 252 பயணிகளும் ஆத்திரமாகி, விமானநிலைய மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், மதியம் 2 மணியளவில் அனைத்து பயணிகளுக்கும் குடிநீர், மதிய உணவு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த விமானம் மாலை 4 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், மாலை 5 மணிக்கு மேலாகியும் அந்த விமானத்தின் பழுதுகள் நீக்கும் பணி தொடர்ந்ததால், பயணிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பயணிகளை விமானநிலைய அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். அந்த விமானத்தில் பழுதுகளை உடனடியாக சரிபார்க்க முடியவில்லை. எனவே, இலங்கையில் இருந்து மாற்று விமானம் வந்து கொண்டிருக்கிறது. அந்த விமானத்தில் அனைவரையும் ஏற்றி, இரவு 8 மணிக்கு அனுப்பி வைக்கிறோம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கையில் இருந்து இரவு 7.30 மணியளவில் மாற்று விமானம் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் பயணிகள் ஏற்றப்பட்டு இரவு 9.30 மணியளவில் விமானம் கொழும்புக்குப் புறப்பட்டு இரவு 10.28 மணிக்கு இலங்கை சென்றடைந்தது. இவ்வாறு ஒரு மணி நேர பயணமான சென்னை-இலங்கை பயணத்துக்கு, நேற்று காலை செல்ல வேண்டிய 252 பயணிகளும் சென்னை விமான நிலையத்தில் 12 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்ததில் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும், அப்பயணிகள் ஓய்வெடுப்பதற்கு ஓட்டல் வசதிகூட செய்து கொடுக்காமல், விமானநிலைய ஓய்வறையிலேயே தங்க வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.