சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை பார்வையிட்ட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் குழு
சென்னை: ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) பிரதிநிதிகள் குழு, விரைவில் வரவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைப் பார்வையிட்டனர். ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) பிரதிநிதிகள் குழு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், வரவிருக்கும் மெட்ரோ திட்டங்களை பார்வையிடுவதற்காக, 2025 நவம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சென்னைக்கு வருகை தந்தனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் உயர் அலுவலர்களுடன், AIIB குழுவின் பிரதிநிதிகளான ஆண்ட்ரஸ் பிசாரோ, தென்கிழக்கு ஆசியப் பகுதிக்கான பொதுத்துறை போக்குவரத்து நிபுணர் மற்றும் சந்தோஷ், போக்குவரத்துத் துறையின் முதலீட்டு அலுவலர் ஆகியோர் சென்னையில் வரவிருக்கும் மெட்ரோ ரயில் மேம்பாடுகள், விரிவாக்கத் திட்டங்களுக்கான முன்னேற்றம் மற்றும் முதலீடுகள் குறித்து கலந்துரையாடல் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் குழு நேற்று விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.46 கி.மீ நீளத்திற்கான வழித்தடம் (கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உட்பட) மற்றும் பட்டாபிராம் முதல் கோயம்பேடு (ஆவடி வழியாக) வரையிலான 21.76 கி.மீ நீளத்திற்கான வழித்தடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் இன்று பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் சுங்குவார்சத்திரம் வரையிலான (28 கி.மீ) வழித்தடத்தை பார்வையிட்டனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், இணைப் பொது மேலாளர் நரேந்திர குமார், (திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாடு) மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் இந்த ஆய்வின்போது உடன் இருந்தனர். இந்த ஆய்வு, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து நிலையான நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகளை மேம்படுத்துவதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.
