சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் இன்று இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 5.8 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை தென் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை இன்று பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 8ம் தேதி வரை குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக் காற்று 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


