நெல்லை: நெல்லை அருகே வீட்டில் தனியாக இருந்த சென்னை வக்கீல் உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையைச் சேர்ந்தவர் வக்கீல் மணி ரெட்டியார் (55). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது ஒரு மகன் மற்றும் மகள் இருவரும் வெளிநாட்டில் படித்து வருகின்றனர். இவர் ஒரு வழக்கு தொடர்பாக கடந்த 4 மாதங்களாக சென்னையிலிருந்து நெல்லைக்கு வந்து சென்று கொண்டிருந்தார்.
அலைச்சலை தவிர்ப்பதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. மேலும் அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் பக்கத்து வீடுகளுக்கு பரவியது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சிவந்திப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று காலை சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மணி ரெட்டியார் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து வக்கீல் எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரது செல்போன் லாக் செய்யப்பட்டுள்ளது. அதை கைப்பற்றிய போலீசார் அதன் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
