*இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அஞ்சலி
சிவகிரி : சென்னையில் உயிரிழந்த தலைமை காவலரின் உடல் அவரது சொந்த ஊரான சிவகிரியில் நேற்று 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
சிவகிரி சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் சக்தி ராகவேந்திரன் (44). கடந்த 2006ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த இவர் சென்னை கிளாம்பாக்கம் ஜி3 காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 18ம்தேதி இரவு இயற்கை மரணமடைந்த அவரது உடல் சிவகிரிக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து நேற்று அரசு மரியாதையுடன் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. நிகழ்வில் இன்ஸ்பெக்டர் கண்மணி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தந்தை இறந்த நிலையிலும் பிளஸ் 1 தேர்வு எழுதிய மகள்
இறந்த தலைமை காவலர் சக்தி ராகவேந்திரனுக்கு மனைவி கவிதா (34). மகன்கள் விஷ்ணு, கணேசன், மகள் அனுசுயாதேவி ஆகியோர் உள்ளனர். இதில் அனுசுயாதேவி ராயகிரியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பிளஸ் 1 பொதுத் தேர்வு நடைபெற்ற நிலையில் தந்தை இறந்த நிலையிலும் பிளஸ் 1 பொதுத் தேர்வை எழுதி முடித்துவிட்டு பின்னர் தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

