கோவை: கோவையில் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், பீளமேடு அருகே உடையாம்பாளையம் அசோக் நகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ளனர். இங்கு சென்னையை சேர்ந்த நவீன் (25) என்பவர் தனது நண்பர்களுடன் தங்கி இருந்தார். கடந்தாண்டு பட்டப்படிப்பை முடித்த இவர், கோவையில் வேலை தேடி வந்தார்.
நேற்று நள்ளிரவு நண்பர்கள் சிலருடன் நவீன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது நவீன் தரப்புக்கும், மற்றொரு தரப்பினருக்கும் வாக்குவாதம் எழுந்து கைகலப்பானது. ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் நவீன் மற்றும் அவரது நண்பர்களை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. பின்னர் திடீரென நவீனை ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்தியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சென்று உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். கஞ்சா விற்பனை தொடர்பாக எழுந்த தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


