செடி முருங்கை சாகுபடியின்போது சில முக்கியமான பராமரிப்புகளை செய்வது அவசியம். இந்த பராமரிப்புகளை செய்தால்தான் உயர் விளைச்சலை நாம் காண முடியும்.விதைத்து 2 மாதங்கள் கழித்து களை எடுப்பது மிக அவசியம். செடிகள் 1 மீட்டர் வளர்ந்தவுடன் நுனிகளைக் கிள்ளிவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பக்கக் கிளைகள் அதிகம் வளரும்.செடிமுருங்கை 6 மாதத்தில் காய்க்கத் தொடங்கும். இதுபோல் ஒவ்வொரு காய்ப்புக்குப் பிறகும் செடியை வெட்டிவிட்டு மூன்று ஆண்டுகள் பராமரிக்கலாம். ஒவ்வொரு முறையும் தேவையான அளவு உரங்களை இடவேண்டும். பழ ஈக்களின் குஞ்சுகள் முருங்கைக்காயை தின்று சேதப்படுத்தும். இவற்றைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட காய்களை மட்டும் சேகரித்து அகற்ற வேண்டும். மானோகுரோடோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். மருந்து தெளிப்பதற்கு முன் காய்கள் இருந்தால் அவற்றைப் பறித்துவிட வேண்டும். பூ மொட்டு துளைப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்த, பூக்கள் தோன்ற ஆரம்பித்தவுடன் டைக்குளோர்வாஸ் ஒரு மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
+


