Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குற்றப்பத்திரிகைகளை ஒன்றாக இணைக்க கோரி யூடியூபர் சங்கர் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக யூடியூபர் சங்கர் கைது செய்யப்பட்டார். பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி அவர், சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து கடந்தாண்டு செப்டம்பர் 25ம் தேதி வெளியில் வந்தார். இதையடுத்து தன் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய கோரி யுடியூபர் சங்கர் தாக்கல் செய்திருந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து, ‘யூடியூபர் சங்கர் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க தடையில்லை’ என உத்தரவிட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் கடந்த பிப்ரவரி 24ம் தேதி அனுமதி வழங்கியது.

இந்நிலையில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து குற்றப்பத்திரிக்கைகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று யூடியூபர் சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் குமார், அலோக் அரதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. யூடியூபர் சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மனுதாரருக்கு எதிரான 15 வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து குற்றப்பத்திரிகைகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும். ஒரு பேட்டி கொடுத்தமைக்காக அவர் மாநிலம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டார்’ என்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர், ”அனைத்து வழக்குகளுக்குமான குற்றப்பத்திரிக்கை ஒரே நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அதில் ஒரு பிரச்னையும் கிடையாது. குறிப்பாக யூடியூபர் சங்கரை பொருத்தமட்டில் இந்த நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் மீறி செயல்பட்டு வருகிறார்’ என்றனர்.இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ”இந்த விவகாரத்தில் ஒரே நீதிமன்றத்தில் வெவ்வேறு வழக்குகளில் தனித்தனியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதில் எந்தவித தவறும் இருப்பதாக தெரியவில்லை. எனவே அனைத்து குற்றப்பத்திரிகைகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்கிறோம் என்று உத்தரவிட்டு, ”யூடியூபர் சங்கர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.