Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விலையில்லாததால் விரக்தி; காலிபிளவர் செடிகளை காலி செய்த விவசாயிகள்: டிராக்டர் மூலம் அழிப்பு

ஆண்டிபட்டி: காலிபிளவருக்கு போதிய விலை கிடைக்காததால் விரக்தி அடைந்த விவசாயிகள் டிராக்டரை கொண்டு அழித்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள திருமலாபுரம், கரிசல்பட்டி, கண்டமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலிபிளவர் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் விளையும் காலிபிளவர்கள் ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூர், மதுரை உள்ளிட்ட மார்க்கெட் மூலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த ஆண்டு ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் காலிபிளவர் விளைச்சல் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. அதே நேரத்தில் அதிகமான வரத்து காரணமாக சந்தைகளில் காலிபிளவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் முகூர்த்த நாட்கள் இல்லாத காரணத்தால் ஒரு கிலோ காலிபிளவர் ரூ.10க்கு கூட விற்பனையாகவில்லை. விலை வீழ்ச்சி காரணமாக காலிபிளவர் பயிரிட்ட விவசாயிகள் வேலை ஆட்களுக்கு கூலி கொடுக்க கூட முடியாமல் தவித்து வந்தனர்.

போதிய விலை கிடைக்காத காரணத்தால், ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள காலிபிளவரை செடிகளில் இருந்து பறிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். மூன்று மாத உழைப்பிற்கு ஊதியம் கிடைக்காத காரணத்தால் விரக்தி அடைந்த விவசாயிகள் காலிபிளவர் செடிகளை டிராக்டர் கொண்டு அழித்து வருகின்றனர். எதிர்காலத்தில் விவசாயத்தை காக்கும் வகையில் அனைத்து விலை பொருட்களும் நிலையான விலையை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.