தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு குறித்து 4 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்: போக்குவரத்துத்துறை உயர்மட்டக் குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு குறித்து 4 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கட்டணம் நிர்ணயிக்க ஐகோர்ட் உத்தரவுப்படி போக்குவரத்து துறை செயலர் தலைமையில் உயர்மட்டக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உயர்மட்டக் குழுவை நியமித்து 2024 டிச.6ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிக்கை அளித்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், மக்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க போக்குவரத்துத்துறை செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.


