Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு திமுகவினர் நூதன பிரசாரம்: பொதுக்கூட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக அல்வா துண்டறிக்கை வழங்கினர்

சென்னை: ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், ஒன்றிய அரசுக்கு எதிராக அல்வா துண்டறிக்கையை வழங்கினர். ஒன்றிய அரசின் 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. ஒன்றிய நிதி அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழ்நாட்டிற்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு எந்த முக்கியமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்திவருகிறது என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. வழக்கமாக ஒன்றிய நிதியமைச்சர் வழங்கும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் திருக்குறளும் இந்த முறை இடம்பெறவில்லை. தமிழ்நாட்டிற்கான எந்த முக்கிய திட்டங்களும் இடம்பெறவில்லை. மொத்தத்தில் ஏமாற்றம், ஏமாற்றம், ஏமாற்றம்” என்று தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். மேலும் ஆட்சி அமைக்கக் கூடிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்தால் ஆயிரம் கோடிகளில் திட்டங்களை அறிவிப்பார்கள்.

ஆனால், தேர்தல் நடக்கும் காலத்தில்கூட அள்ளிக் கொடுக்க மனம் இல்லாமல் வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு ஏமாற்றப் பார்க்கிறது ஒன்றிய பாஜ அரசு. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது என்பது தெளிவாக தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள் என்று திமுக கூட்டணி கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. தேர்தல் நேரத்தில் கூட தமிழகத்திற்கு பாஜ எதையும் அறிவிக்காதது பேசும் பொருளானது. இந்நிலையில் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையின் 2வது நாளான நேற்று, ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு அல்வா தருகிறது என்பதை விளக்கும் வகையில் அல்வா துண்டறிக்கை வழங்கப்பட்டது.

அந்த துண்டு அறிக்கையில், ‘‘இது யாரு கொடுத்த அல்வா? பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு பாஜ கொடுத்த அல்வா” என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. மேலும் அந்த படத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டுவது போலவும், பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சாப்பிடுவது போலவும் அந்த படம் இடம் பெற்றிருந்தது. இந்த துண்டறிக்கை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் திமுகவினர் வழங்கினர். திமுகவினர் விநியோகித்த துண்டு அறிக்கை சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. அதில் ஒன்றிய அரசுக்கு எதிராக ஒவ்ெவாருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து வருகின்றனர்.