மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 20 எம்.பி.க்கள், திடீரென தங்களை ‘நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா’ என்ற யாருக்கும் தெரியாத திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஒரு சிறிய கட்சியுடன் இணைத்துக்கொண்டுள்ள விவகாரம், இந்திய அரசியல் களத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஆனால், இது வெறும் கட்சி மாற்றம் அல்ல; ‘கட்சித்தாவல் தடை சட்டத்தில்’ (Anti-Defection Law) இருந்து தப்பித்து, தங்கள் பதவியை தக்க வைத்துக்கொள்வதற்கான ஒரு ‘நூதன’ வியூகம் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முக்கியமான அரசமைப்பு சட்டத்திருத்த மசோதாக்களை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாஜ கூட்டணி அரசுக்கு பெரும் பலம் தேவைப்படுகிறது. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களை தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம், நாடாளுமன்றத்தில் நினைத்ததை சாதிக்கும் பெரும்பான்மையை உறுதிசெய்ய பாஜ துடிக்கிறது. ஆனால், இந்த வியூகத்தில் ஒரு பெரிய ‘ட்விஸ்ட்’ உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை முன்வைத்து சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “ஒரு கட்சியின் உயர்நிலை குழுவோ அல்லது ஒட்டுமொத்த கட்சியோ இன்னொரு கட்சியுடன் சேராமல், எம்.பி.க்கள் மட்டும் தன்னிச்சையாக ஒரு கட்சியுடன் இணைவது சட்டப்படி செல்லாது” என்று சுட்டிக்காட்டி உள்ளார்.
மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் உள்ளிட்ட பலரும், இது வெறும் ‘சட்டத்திற்கு புறம்பான தப்பிக்கும் முயற்சி’ என்று வாதிடுகின்றனர். எனவே, சபாநாயகர் ஓம்பிர்லாவின் மேஜையில் இருக்கும் இந்த கோப்பு, இந்திய அரசியலில் நீண்டகால சட்டப்போராட்டத்திற்கு இட்டுச்செல்லும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற ஒன்றிய பா.ஜ அரசு கடும் முயற்சி மேற்கொண்டது. அப்போது நடந்த வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் பதிவாகின. ெபரும்பான்மைக்கு மூன்றில் இரண்டு பங்கு (352) தேவைப்பட்ட நிலையில், போதிய பலம் இல்லாததால் இந்த மசோதா தோல்வி அடைந்தன.
இதனால், மூக்குடைப்பட்ட பாஜ விழித்துக்கொண்டுள்ளது. அன்றைய நிலை இன்றும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளது. அதனால், எதிர்கட்சிகளை உடைத்து 360 எம்.பி.க்களை அறுவடை செய்துவிட வேண்டும் என்பதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. பெரிய கட்சிகளை உடைத்து, சட்டத்தின் ஓட்டைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வது பாஜ வுக்கு ஒன்றும் புதிதல்ல, இது கைவந்த கலை. மேற்கு வங்கத்தை தொடர்ந்து, உத்தவ் தாக்ரேவின் சிவசேனா மற்றும் சரத்பவார் கட்சி உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க, ஒன்றிய பாஜ அரசு கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ‘இந்தியா’ கூட்டணியில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுகளை பயன்படுத்தி, இவ்விரு மசோதாக்களையும் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றி விட வேண்டும் என ஒன்றிய பாஜ அரசு துடியாய் துடிக்கிறது. பாஜவின் இந்த ‘நூதன வியூகம்’ வெற்றி பெறுமா அல்லது சட்டத்தின் பிடியில் சிக்கி சிதறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


