Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜ ஆதரவு பேச்சு அதிமுக நிர்வாகியின் ஜமாஅத் பதவி பறிப்பு

கோவை: அதிமுக சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளராகவும், கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் பொதுச்செயலாளராகவும் இருந்தவர் கோவையை சேர்ந்த அப்துல் ஜப்பார். இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் பேசும்போது ‘‘நான் ஒரு இஸ்லாமியன். ஆனாலும் இந்த தேர்தலில் பாஜவுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கூறினேன்.

காரணம் முஸ்லிம்கள் அதிமுகவிற்கு ஓட்டுப்போடமாட்டார்கள். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் பாஜவோடு இல்லை. நம்முடன் ஒரு முஸ்லிம் கட்சி இருந்தது. ஆனால் அந்தக்கட்சியும் சேர்ந்து திமுகவிற்கு ஓட்டு அளித்தது. அதனால் நாம் ஏன் பாஜவை பகைக்க வேண்டும்?’’ என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத்தின் ஆட்சி மன்றக் குழு அவசரக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஐக்கிய ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அப்துல் ஜப்பார் நீக்கப்பட்டுள்ளார். அப்துல் ஜப்பாரின் பேச்சுக்கும், ஐக்கிய ஜமாஅத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும், அவரது பேச்சுக்கு ஐக்கிய ஜமாஅத் உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்ததால் அவரை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளதாகவும் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தெரிவித்துள்ளது.