வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம்
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் நவம்பர் 7ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
தெற்கு மியான்மர் கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரண மாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் மியான்மர்- வங்கதேச கடற்கரையில் வடக்கு, வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு எனவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது எனவும், மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு, வரும் 5ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.