Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குற்றங்களின் கூடாரமாகும் இரவு நேர ‘எப்எல்-3’ பார்கள்; சென்னையில் காற்றில் பறக்கும் நேரக் கட்டுப்பாடுகள்; கொலை நடக்க காரணமான பார் உரிமையாளரை கைது செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சென்னை: சென்னையில் இரவு நேர பார்கள் சட்டவிதிகளை மீறி நள்ளிரவு 1 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கொலை மற்றும் பாலியல் குற்றங்கள் நடக்க இரவு நேர பார்கள் முக்கிய காரணமாக உள்ளது. எனவே குற்றம் நடக்கும் பார் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய காவல்துறை முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகர காவல் எல்லையில் சென்னை மாநகராட்சி அனுமதி மற்றும் உரிய சட்ட விதிகளின்படி 3 விதமாக பார்கள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.

அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ‘எப்எல்-2’ என்ற பெயரில் மனமகிழ்மன்றங்கள், கிளப்புகள், ஏசி அல்லாத சிறிய பார்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரையும், ‘எப்எல்-3’ என்ற பெயரில் முழுவதும் குளிர்ரூட்டப்பட்ட ஏசி பார்கள், பப்புகள், 3 நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்களுக்கு காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரையும், ‘எப்எல்-3ஏ’ என்ற பார்கள், தமிழ்நாடு சுற்றுலா கழகத்தில் உள்ள பார்கள், 5 மற்றும் 7 நட்சத்திர ஓட்டல்களில் காலை 11 மணி முதல் 12 மணி வரை நடத்த சென்னை காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் குறிப்பாக ‘எப்எல்-3’ அனுமதி பெற்ற பார்கள், பப்புகள் என 40 முதல் 50 வரை உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை 3 நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் தனியாகவும் எப்எல்-3 அனுமதிக்கான பார்கள் நடந்து வருகிறது. இந்த வகை பார்கள் சென்னையில் அண்ணாநகர், கோயம்பேடு, நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற இடங்களில் தான் இயங்கி வருகிறது. இந்த எப்எல்-3 அனுமதிக்கான பார்களில் தான் ‘டிஜே’ இசைகளுடன் மது விருந்துகளுடன் நடனமாடும் வசதிகள் உள்ளது. இந்த வகை பார்களில் தான் தற்போது அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடக்கும் கூடாரமாக மாறி வருகிறது.

டிஜே இசையுடன் நடத்தப்படும் மதுபார்களில் 30 வயதுக்குட்பட்டவர்கள் தான் அதிகமாக வருகிறார்கள். இந்த பார்களில் விதிமுறைப்படி ஜோடியாகத்தான் வர முடியும், ஆனால் ஜோடி இல்லாமல் வரும் வாலிபர்களை பாருக்குள் அனுமதிக்கும் வகையில் பார் நடத்தும் உரிமையாளர்களே இளம் பெண்களை பார்கள் முன்பு ஒரு இரவுக்கு நுழைவு கட்டணமாக ரூ.1500 முதல் ரூ.4 ஆயிரம் வரை ஜோடி சேர்க்கும் பணிகளையும் அவர்களே செய்கின்றனர். இதற்காக பல பார்களில் பவுன்சர்கள் மூலம் தனியாக வரும் வாலிபர்கள் மற்றும் தனியாக வரும் இளம்பெண்களுக்கு ஜோடி பிடித்து கொடுத்து வருகின்றனர்.

இதுபோன்ற ஜோடிகளால் தான் மது போதையில் டிஜே நடனத்தின் போது, ஜோடியாக வந்த வாலிபர்களை விட்டுவிட்டு, வசதியான வாலிபர்களை கவரும் வகையில் இளம்பெண்கள் பலர் பாருக்குள்ளே ஜோடிகளை மாற்றிக்கொள்கிறார்கள். அப்போது அவர்கள் போதையில் இருக்கும் வாலிபர்களுடன் அன்று இரவு முழுவதும் இருக்க ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பேரம் பேசி உல்லாசத்திற்கு செல்லும் வகையிலும் தற்போது பார்கள் வழிகாட்டிகளாக உள்ளன. பார்களில் ஜோடிகளை மாற்றும் முறையால் தேவையில்லாத பிரச்னைகள் உருவாகிறது. போதையில் எனது ஜோடியை நீ எப்படி நடனமாட அழைக்கலாம், தனிமையில் இருக்க விலை பேசலாம் என்று பிரச்னை தொடங்கி கடைசியில் பார்களில் அடிதடி மோதல்கள் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான கட்டிடத்தில் மதுபார்களில் ஜோடிகள் கைமாற்றிய விவகாரத்தில் அடிதடி மோதல்கள் நடந்து பார்கள் சூறையாடப்பட்டது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்த சம்பவங்களும் நடந்தது. பிரபல தொழிலதிபரின் கட்டிடத்தில் உள்ள பாரில் தகராறு நடந்ததால் அதுகுறித்து தகவல்கள் வெளியே வரக்கூடாது என்று காவல்துறை உயர் அதிகாரிகளையும் சிலர் மிரட்டிய சம்பவங்களும் நடந்தது.

அதைதொடர்ந்து சென்னை மாநகர காவல் எல்லையில் இரவு நேரம் பார்கள் அனுமதிக்கான நேரக்கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது. ஆனால் அந்த கட்டுப்பாடுகளும் சில நாட்களில் தளர்த்தப்பட்டது. பின்னர் போலீஸ் கமிஷனராக அருண் பதவிக்கு வந்த பிறகு சென்னையில் அதிகமாக இளசுகள் கூடும் ‘எப்எல்-3’ அனுமதிக்கான பார்களின் கட்டுப்பாடுகள் கடுமையாகப்பட்டது. எப்எல்-3 அனுமதிக்கான பார்கள் உள்ள காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் இரவு 10.30 மணிக்குள் பார்களின் முகப்பு விளக்குகள் அனைக்க வேண்டும். 11 மணிக்கு மேல் பார் நடத்தக்கூடாது. அப்படி நடந்ததால் பார் உரிமம் ரத்து செய்ய வருவாய்துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதிகளவில் பணம் கொட்டும் எப்எல்-3 பாருக்கான உரிமம் பெற வசதிப்படைத்த நபர்கள் மற்றும் குற்றம் பின்னணியில் உள்ள நபர்கள் போட்டி போடுகிறார்கள். பார் நடத்தும் இடத்திற்கு சென்னை மாநகராட்சியில் சுலபமாக உரிமம் பெற்று விடுகிறார்கள். ஆனால் மதுவிற்பனை மற்றும் டிஜே இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைக்கு சென்னை காவல்துறை தான் உரிமம் வழங்க வேண்டும். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் போலீஸ் கமிஷனராக இருந்த அருண், தனது காவல் எல்லையில் அனுமதிக்கக்காக அரசியல் பிரமுகர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பரிந்துரை செய்த 78 எப்எல்-3 பார்களுக்கு அனுமதி வழங்காமல் நிராகரித்தார். இதனால் சென்னையில் குற்றங்கள் நடக்க இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

பின்னர் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எப்எல்-3 பார்களின் கட்டுப்பாடுகளை காவல்துறையினர் முறையாக பின்பற்றாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் கோயம்பேடு பகுதியில் தொழிலதிபர் பாலாஜி நடத்தி வந்த ‘சென்னை கேட்வே’ எப்எல்-3 மதுபாரில் காவல்துறையின் விதிமறைகளை முறையாக பின்பற்றப்படாமல் 18 வயதுக்கு உட்பட சிறுமிகள் மற்றும் சிறுவர்களிடம் ரூ.1,500 மற்றும் 2,500 கட்டணத்தை பெற்று கொண்டு பாருக்குள் அனுமதித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் தான் தற்போது 18 வயது இலங்கை பெண்ணை வாலிபர்கள் காரை ஏற்றி கொலை செய்யும் நிலை உருவாகியது. கேட்வே பாரில் 18 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதிக்காமல் இருந்து இருந்தால், இளம் பெண்ணை போதையில் வாலிபர்கள் காரை ஏற்றி கொன்ற சம்பவம் நடந்து இருக்காது. எனவே, கொலை செய்யும் வகையில் குற்றங்கள் நடக்க காரணமாக இருந்த கேட்வே பார் நடத்திய உரிமையாளரும் தவெக நிர்வாகியான பாலாஜி மீது கொலை செய்ய தூண்டியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், குற்றம் சம்பவம் நடந்த ‘சென்னை கேட்வே’ பார் உரிமத்தை காவல்துறை தற்காலிகமாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறையினர் தற்காலிகமாக ரத்து செய்து, பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இது ஏற்புடையதாக இல்லை என்றும், சிறுமிகள் என்று தெரிந்து பாருக்குள் அனுமதி அளித்தும், அவர்கள் மது அருந்தியது குற்றம் என தெரிந்தே கண்டுகொள்ளாமல் இருந்தால் ‘சென்னை கேட்வே’ பாருக்கு நிரந்தரமாக உரிமம் ரத்து செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சென்னை காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நிரந்தரமாக பார் உரிமம் ரத்து செய்தால் இனி இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், தேர்தலுக்கு முன்பு போன்று அனைத்து வகையான பார்கள், பப்புகள், கேளிக்கை விடுதிகளில் நடத்தப்படும் பார்களை கண்காணிக்க வேண்டும். இரவு 11 மணிக்கு மேல் பார்கள் இயங்காத வகையில் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுபார்களில் பாலியல் தொழில் செய்யும் இளம் பெண்களை பாருக்கு தனியாக வரும் வாலிபர்களுக்கு ஜோடி பிடித்து கொடுக்கும் இடைத்தரகர்கள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பார்களில் குற்ற சம்பவங்கள் நடந்தால் பார் உரிமையாளர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வார இறுதி நாட்களில் எப்எல்-3 பார்களின் முகப்பு விளக்குகளை நிறுத்துவிட்டு, பார்கள் விடிய விடிய 3 மணி வரை நடப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சென்னை காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.