சென்னை: மன்னிப்பு கேட்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். சென்னை கண்ணகி நகரில் நடைபெற்ற ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.
அதானி ஊழல் தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை கொடுத்திருக்கிறாரே, உங்களின் பதில் என்ன? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது; அவருக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஒரு அறிக்கை கொடுப்பார். அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். முதலமைச்சரின் இந்த பதில், பாமகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், மன்னிப்பு கேட்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் கூறியதாவது; எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?. தேவையில்லாமல் தினந்தோறும் ஒரு அறிக்கை விடுகிறார்.
இதில் என்ன தவறு இருக்கிறது? தமிழில் உபயோகப்படுத்துகிற வார்த்தை தானே அது?. அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்?. கடந்த காலங்களில் அவர் விட்ட அறிக்கை எல்லாம் எடுத்து பார்த்தால், கொச்சையாக யாரையும் தரம் தாழ்ந்து பேசும் சூழலில் இருப்பவர். எங்கள் முதலமைச்சர் கன்னியத்துக்கு பாதுகாவலராக இருப்பவர்.
கன்னியக்குறைவாக அவர் எதுவும் பேசவில்லை. அப்படி பேசுகின்ற சூழலும் எங்களுடைய முதலமைச்சருக்கு எப்போதும் ஏற்படாது. மன்னிப்பு கேட்கின்ற பழக்கம் எங்களுக்கு இல்லை. தவறு என்று இருந்தால், முதலமைச்சர் அதற்கு உண்டான பிராயசித்தத்தை தேடுவார். அவர் கூறிய வார்த்தையில் தவறு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.



