Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகள் நீக்கம்.. தமிழ்நாட்டில் 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!!

டெல்லி: அங்கீகரிக்கப்படாத கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையாக தமிழ்நாட்டில் 24 கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் 2800க்கும் அதிகமான கட்சிகள் உள்ளன. இவற்றில் பல இந்த நிலையை தொடர்வதற்கு தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்பது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து இத்தகைய அரசியல் கட்சிகளை அடையாளம் காண நாடு முழுவதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதுவரை 345 அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த இவை 2019ம் ஆண்டிலிருந்து கடந்த 6 ஆண்டுகளில் ஒரு தேர்தலிலும் போட்டியிடவில்லை. மேலும் இவற்றிற்கு எங்கேயும் அலுவலகங்கள் இல்லை.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ்குமார் தலைமையின் கீழ் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் இந்த 345 அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். இதன்படி, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் இந்த கட்சிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கீகரிக்கப்படாத கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையாக தமிழ்நாட்டில் தமிழ் மாநில கட்சி, மீனவ மக்கள் முன்னணி, காமராஜர் மக்கள் கட்சி உள்ளிட்ட 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருமான வரி சலுகை, அங்கீகாரம், நட்சத்திர பரப்புரையாளர் அனுமதி, பதிவு செய்து அங்கீகரிக்கப்படாத கட்சிகள், அரசின் சலுகைகளை அனுபவிக்கிறார்கள். பதிவு செய்யப்பட்ட கட்சிகளை தேர்தல் ஆணையப் பட்டியலிலிருந்து நீக்கலாமா என கேட்டு பதில் பெற்று ஒரு மாதத்திற்குள் பரிந்துரைக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. பின்னர் தேர்தல் ஆணையத்தால் இறுதி முடிவு எடுக்கப்படும்.