தவெக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை அதிகரிப்பு; திமுக திட்டங்களுக்கு முலாம் பூச்சு...பட்ஜெட் மீது விமர்சனம்
சென்னை: தவெக அரசின் நிதிநிலை அறிக்கை, தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கியிருக்கிறது என்று திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்து உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து தரப்பினருக்கும் பெருத்த ஏமாற்றத்தை தந்திருக்கிற இந்த பட்ஜெட்டில், தவெக அளித்துள்ள முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டில் கடன் வாங்குவதை குறைக்க முடியாது. ஒன்றிய அரசின் அனுமதியுடன்தான் கடன் வாங்குகிறோம். கடன் வாங்குவது அதிகரிக்க தான் செய்யும் என இன்று நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரே ஒப்புகொண்டுள்ளார். தவெக அரசு நடப்பாண்டில் வாங்கி இருக்கும் கடன் தொகையை வைத்து பார்த்தால், தமிழ்நாட்டின் கடன் அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் கோடியாக அதிகரிக்கலாம் என்று தங்கம் தென்னரசு கூறி இருக்கிறார்
தி.மு.க ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை (revenue deficit) ரூ.48,699 கோடியாக இருந்த நிலையில், தற்போது அது இன்றைய த.வெ.க ஆட்சியில் ரூ.55,775 கோடியாக உயர்ந்துள்ளது. ஏறத்தாழ ரூ.7 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பட்ஜெட்டை பார்த்தாலே திமுக திட்டங்களுக்கு முலாம் பூசியுள்ளது தெளிவாக தெரிகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட், ஆனால் ஏமாற்றத்தை மட்டுமே தந்துள்ளது என்று கூறியுள்ளார்.
