தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு: பொதுமக்கள் அவதி
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மின்சார ரயில் சேவையை நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கல்வி, வேலை, தொழில் நிமித்தமாக பயணிப்போருக்கு மின்சார ரயில் சேவை மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. குறிப்பாக காலை, மாலை வேளைகளில் ரயிலில் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்த நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
சுமார் ஒன்றரை மணி நேரம் ரயில்கள் வராததால், கல்லூரி, அலுவலக பணி முடிந்து வீடுகளுக்கு செல்வோர் ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், கடற்கரை - தாம்பரம் இடையே அனைத்து ரயில்நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது என்றும், தற்போது கோளாறு சரிசெய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
