Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாதிக்கப்பட்ட பெண்ணின் பாலியல் வன்கொடுமையை நிரூபிக்க உடலில் காயங்கள் தேவையில்லை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் கீழ் கீழமை நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற நபர் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி எஸ்.வி.என் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தன்னுடன் பழகிய நபருடன் சென்றுள்ளார். அதனை அவரது சகோதரியும் பார்த்துள்ளார். ஆனால் அந்தப் பெண்ணின் சகோதரியை வழக்கில் சாட்சியாக ஆஜர்படுத்தப்படவில்லை. இருந்தாலும் பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதித்த மருத்துவரின் சாட்சியங்களை நீதிமன்றம் ஏற்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமையை நிரூபிக்க பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் இருக்க வேண்டியது அவசியமில்லை. பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு உடலில் காயங்கள் ஏற்படுகின்றன என்பது பொதுவான கட்டுக்கதை. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த வெவ்வேறு வழிகளில் எதிர்வினையாற்றுகிறார்கள். ஆனால் ஒரே மாதிரியான வழியை பின்பற்றுகிறார்கள் என்று கூறமுடியாது. குறிப்பாக பயம், அதிர்ச்சி, சமூக களங்கம் அல்லது உதவியற்ற சூழல் போன்ற காரணிகளால் பாதிக்கப்படும் நபர் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள். பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பெரும்பாலும் பெண்களை களங்கப்படுத்துகின்றன. அதனால் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தை வெளிப்படுத்துவது கடினம். இக்கட்டான சூழலில் ெவவ்வேறு நபர்கள் வித்தியாசமான முறையில் நடந்துகொள்வார்கள்.

எடுத்துக்காட்டாக, பெற்றோருக்கு மரணம் ஏற்பட்டால் ஒரு நபர் அழலாம்; ஆனால் அதே சூழ்நிலையில் மற்றொரு நபர் அழாமல் கூட இருக்கலாம். ஒரு ஆண் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் போது, அந்தப் பெண் எதிர்வினையாற்றலாம். அல்லது எதிர்வினையாற்றாமலும் இருக்கலாம். அது சம்பந்தப்பட்டவரின் தனிப்பட்ட பண்புகளைப் பொறுத்து அமையும். இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படாததால், சட்டப்பிரிவு 366-ஏ நிலைத்திருக்க கூடியது அல்ல; கடத்தப்பட்டதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்களை போலீஸ் தரப்பில் நிரூபிக்கப்படவில்லை. மேல்முறையீட்டாளரின் தண்டனையை உறுதி செய்வது பொறுத்தமானதாக இருக்காது. அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது’ எனக்கூறி தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.