Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரஷ்யாவுக்கு போருக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்தையும், சாதனங்களையும் அளித்ததாக19 இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா

வாஷிங்டன்: 19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருவதை 'சட்ட விரோதம்' என்று அமெரிக்கா வர்ணித்து வருகிறது. எனவே, அந்த போருக்கு தேவையான பொருட்களை ரஷ்யாவுக்கு அளிக்கும் நாடுகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது பொருளாதார தடை விதித்து வருகிறது. ரஷ்யாவுக்கு போருக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்தையும், சாதனங்களையும் அளித்ததாக நேற்று 400 க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க நிதித்துறை பொருளாதார தடை விதித்தது.

தடை விதிக்கப்பட்ட நிறுவனங்களில், அபார் டெக்னாலஜிஸ், டென்வாஸ் சர்வீசஸ், கேலக்சி பியரிங்ஸ், ஆர்பிட் பின்டிரேட், குஷ்பு ஹோனிங், லோகேஷ் மெஷின்ஸ், ஆர்.ஆர்.ஜி.என்ஜினீயரிங் டெக்னாலஜிஸ், ஷார்ப்லைன் ஆட்டோமேஷன், ஸ்ரீஜி இம்பெக்ஸ், ஷ்ரேயா லைப் சயின்ஸ் உள்பட 19 இந்திய நிறுவனங்களும் அடங்கும். இந்த பட்டியலில், சீனா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளின் நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷ்ய ராணுவம் மற்றும் அந்த நாட்டின் தொழில் துறைக்கு தேவையான மின்னணு சாதனங்கள், தொழில்நுட்பங்கள் மூன்றாம் தரப்பு நாடுகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. இந்தியாவை சேர்ந்த அசென்ட் அவிடேசன் அண்டியா, மஸ்க் ட்ரான்ஸ், டிஎஸ்எம்டி குளோபல், புயூடிரிவோ ஆகிய நிறுவனங்கள் ரஷ்ய நிறுவனங்களுக்கு பொருட்களை அனுப்பி உள்ளன. இந்தியாவின் அசென்ட் அவிடேசன் நிறுவனம் ,ரஷ்ய நிறுவனங்களுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான விமான உதிரிபாகங்களை அனுப்பி உள்ளது.

இவை அமெரிக்க தயாரிப்பு உதிரி பாகங்கள் ஆகும். இதேபோல இந்தியாவை சேர்ந்த மஸ்க் டிரான்ஸ் நிறுவனம் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான சி.எச்.பி.எல். பொருட்களை ரஷ்ய நிறுவனங்களுக்கு அனுப்பி இருக்கிறது. இந்த நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. இனிமேல் இந்த நிறுவனங்களால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் இருந்து பொருட்களை வாங்க முடியாது" என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதனிடையே அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.