Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே சமாதான முயற்சி தோல்வி என தகவல்..!

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார். புதுச்சேரியில் நடந்த பாமக பொதுக்குழு மேடையில் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில், வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அடுத்ததாக நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் வெற்றி பெறுவதுடன், தனது பக்கம் தனிப்பெரும்பான்மையை உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளில் ராமதாஸ் தீவிரம் காட்டி வருகிறார்.

அதிலும் குறிப்பாக, அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்டலங்களைக் குறிவைத்து, அங்குள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். கடந்த 16-ம் தேதி முதல், டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளைத் தொடர்ந்து சந்தித்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டு வருகிறார்.

இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸை அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ளார். ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே இன்று சமாதானம் ஏற்பட்டு, மோதல் போக்கு முடிவுக்கு வரும் என்று கட்சியினர் ஆர்வத்துடன் எதிர்பர்த்த நிலையில் ராமதாஸ் அன்புமணி இடையே சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக சந்திப்பு நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் நியமிப்பதில் ராமதாஸ் உறுதியாக இருப்பதால் சமாதான முயற்சி தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அன்புமணி ராமதாஸ் தைலாபுரத்தில் இருந்து சோகமான முகத்துடன் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, தைலாபுரத்தில் ராமதாஸை சைதை துரைசாமி மற்றும் ஆடிட்டர் குருசாமி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.