Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிபர் டிரம்ப் அறிவித்த புதிய உத்தரவு.. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற மீது பொருளாதாரத் தடை விதிப்பு!

வாஷிங்டன்: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பொருளாதார தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெடுத்திட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து தனது அதிரடி உத்தரவுகள் மூலம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்று வருகிறார். ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இருந்து விலகியது முதல் சர்வதேச அமைப்புகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளுக்கான நிதிஉதவியையும் நிறுத்தி உள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவையும், அதன் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலையும் குறிவைத்து ஆதாரமற்ற விசாரணைகளை நடத்தி வரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார். காசா போர் விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்ததால், தற்போது டிரம்ப் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக, டிரம்ப் வெளியிட்ட நிர்வாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவும், காசாவில் இஸ்ரேலும் போர்க்குற்றங்கள் செய்ததாகக் கூறப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணையைக் குறிப்பிட்டு, டிரம்பின் நிர்வாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் இந்த உத்தரவால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் போன்றோருக்கான சொத்துக்களை முடக்கப்படும். அவர்களுக்கு வெளிநாட்டு பயணங்களுக்கு தடையும் விதிக்கப்படும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர்களாக அமெரிக்காவோ இஸ்ரேலோ இல்லாத நிலையில், தற்போது டிரம்ப் விதித்துள்ள பொருளாதார தடைகள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.