Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வட மாநிலங்களில் வாட்டிவரும் வெப்ப அலை: உ.பி.யில் 25 தேர்தல் பணியாளர்கள் பலி

டெல்லி: வட மாநிலங்களில் வாட்டிவரும் வெப்ப அலையால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், வெயிலின் தாக்கத்தால் தேர்தல் அலுவலர்கள் 25 பேர் பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான், பீகார், உத்திரபிரதேசம், பஞ்சாப், அரியான, ஒடிசா, டெல்லி, சட்டீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோடை வெயில் 110 டிகிரியை தண்டி சுட்டெரித்து வருகிறது.

உத்திரபிரதேசம் மாநிலம் கண்ப்பூரில் நேற்று நாட்டிலேயே அதிகபட்சமாக 118.76டிகிரி ஃபாரண்ஹீட் வெப்பம் தகித்தது. கடும் வெப்பத்தை தாங்கமுடியாமல் சுருண்டு விழுந்த 1,200 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒடிசாவின் 8 மாவட்டங்களில் நேற்று 113 டிகிரி வெப்பம் வாட்டி வதைத்தது. அங்கு நேற்று ஒரேநாளில் வெப்ப அலையால் 10 பேர் உயிரிழந்தனர். பீகார் மாநிலம் போஜ்பூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் 5 பேர் வெப்ப அலையால் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.

ரோட்டாஸ்,கைமூர், ஹவுரங்காபாத் மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் பலியானார்கள். மிர்சாப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஊர்காவல்படையை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இதே போல் உத்திரபிரதேசம் மாநிலம் மிர்சாப்பூரில் வெப்ப அலை காரணமாக 15 தேர்தல் அலுவலர்கள் பலியாகியுள்ளனர். ராஜஸ்தானில் இதுவரை வெப்பலையால் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆளும் பாஜக அரசு உயிரிழப்பை மறைப்பதாக காங்கிரஸ்கட்சி குற்றம்சாட்டியுள்ள நிலையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நிலமை மிகவும் மோசமாக உள்ளதால் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே தமிழ்நாட்டில் நேற்று வெயில் உக்கிரத்தை காட்டியது. வேலூரில் 111 டிகிரியும், திருத்தணியில் 108 டிகிரியும், சென்னை 106.7 டிகிரி வெயில் பதிவானது.