ஸ்ரீஹரிகோட்டா: நிசார் செயற்கைகோளை சுமந்தபடி ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து GSLV-F16 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ ஆய்வு மையம் நாசாவுடன் இணைந்து நிசார் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது; நிசார் செயற்கைக்கோள் 12 நாட்களுக்கு ஒருமுறை, பூமியை துல்லியமாக படம்பிடித்து அனுப்பும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசாவின் முதல் கூட்டு செயற்கைக்கோளான நாசா - இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
ரூ.11294 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் 2392 கிலோ எடை கொண்டது. புவி தாழ்வட்டப் பாதை செயற்கை கோளான நிசார், பூமியிலிருந்து 747 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்படும். 97 நிமிடங்களில் புவியை ஒருமுறை சுற்றி ஒரு நாளில் 14 முறை வளம் வந்துவிடும்.
புவியை அங்குலம் அங்குலமாக ஆய்ந்து இயற்கை வளங்கள் முதல் கடற்கரை கண்காணிப்பு வரை தரவுகளை ஒவ்வொரு 12 நாட்களுக்கும் துல்லிய வரைபடங்களாக அனுப்பும் உலகிலேயே முதல்முறையாக நாசாவின் எல் பேண்ட் , இஸ்ரோவின் எஸ் பேண்ட் என இரட்டை அலைவரியை ரேடார்களாக நிசார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் வானிலை, பகல் மற்றும் இரவு தரவுகளையும் வழங்குவதுடன் பரந்த அளவிலான பயன்பாடுகளை செயல்படுத்தும்.
'நிசார்' பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும். அதாவது பனிப்படல இயக்கம் மற்றும் தாவர இயக்கவியல். கடல் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கரையோர கண்காணிப்பு, புயல் தன்மை, மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேற்பரப்பு நீர் வளங்களை வரைபடம் செய்யும் திறன் கொண்டதாகும்.