நவீன வசதிகளுடன் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை கட்டப்படும் - முதல்வர் அறிவிப்பு
சென்னை: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு உதவும் வகையில் இந்த ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
சர்வதேச தரத்திலான மோட்டார் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்றார். புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார். புனித ஜார்ஜ் கோட்டை, நாமக்கல் கவிஞர் மாளிகை என பிரிவாக தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது. இப்படி தற்போதைய தலைமைச் செயலகம் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.
இடப்பற்றாக்குறை காரணமாக ஓமந்தூரார் வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. ஆனால் அது பின்னர் மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இந்த சூழலில் தேவையை கருத்தில் கொண்டு 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் கட்டமைக்கப்டும் என அறிவித்தார். நவீன வசதிகளுடன் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் கட்டப்படும் எனவும் முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார்.
தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும். போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டு வந்து ஒருங்கிணைக்கப்படும் எனவும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.




