Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மலையாள திரையுலக பாலியல் புகார்கள் தொடர்பான ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்

திருவனந்தபுரம்: மலையாள திரையுலக பாலியல் புகார்கள் தொடர்பான ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை சீலடப்பட்ட உறையில் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மலையாள பட உலகின் பிரபல நடிகையை, ஒரு கும்பலால் காரில் கடத்தி பலாத்காரம் செய்தது. இந்த சம்பவம் 2017ம் ஆண்டு நடந்தது. இதையடுத்து 7 பேர் கொண்ட கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நடிகைகள் பார்வதி திருவோத்து, ரேவதி, பத்மப்பிரியா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் இணைந்து ‘உமன் இன் சினிமா கலெக்டீவ்ஸ்’ என்ற குழுவை ஏற்படுத்தினர். இவர்கள் ஒருங்கிணைந்து மலையாள சினிமாவில் நடிகைகள், பெண் கலைஞர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதை எதிர்த்து குரல் கொடுக்க துவங்கினர்.

2019ம் ஆண்டு முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, பெண் கலைஞர்கள் மீதான பாலியல் தொல்லைகள் களைய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடும்படி கேட்டனர். அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்த கமிட்டியில் பழம்பெரும் நடிகை சாரதா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா குமாரி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் முன்னணி நடிகைககள் உள்பட 53 பெண் கலைஞர்களிடம் விசாரணை நடத்தி 2019ம் ஆண்டு டிசம்பரில் அறிக்கை சமர்ப்பித்தது.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பார்த்துக்கொண்டனர். இதையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பலர் இந்த அறிக்கையை வெளியிட கோரி வந்தனர். இதை விசாரித்த கேரள தகவல் உரிமை ஆணையம் ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

இதனை அடுத்து ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை கேரளா மட்டுமின்றி இந்திய திரையுலகையே உலுக்கியது. இந்த நிலையில் ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை இன்று சீலடப்பட்ட உறையில் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.