வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில் (நாளை காலை 9 மணி அளவில்) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்புள்ளது. இது வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா, அதனை ஒட்டிய மேற்குவங்கம் கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 29-ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் லேசான சாரல் மழையும், கனமழையும் பெய்து வருகிறது.

