Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்

டெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவராக பேசிய ராகுல் காந்தி, அடுக்கடுக்காக பிரச்னைகளை எழுப்பி பாஜவை திணறடித்தார். ராகுலின் 100 நிமிட பேச்சால் அவையில் அனல் பறந்தது. கடந்த 10 ஆண்டுகளாக விவாதத்தில் நேரடியாக பங்கேற்காத பிரதமர் மோடி எழுந்து நின்று ராகுலின் பேச்சை குறுக்கிட்டார். அமித்ஷா உள்ளிட்ட 9 மூத்த அமைச்சர்கள் பலமுறை பதற்றத்துடன் குறுக்கிட்டனர்.

இந்நிலையில் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பற்றிய விமர்சனம், இந்து பற்றி பேச்சுகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் குறித்து ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனங்கள் அவைக் குறிப்பில் இடம்பெறவில்லை. மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரையில் 11 பகுதிகள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சித்து மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே பேசிய பேச்சுகளும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.

விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் ராகுல் உரையின்போது நேற்று பா.ஜ.க.வினர் இடையூறு செய்தனர் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா தெரிவித்துள்ளார். சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பா.ஜ.க.வினர் என்றும் குற்றம் சாடினார். அவைக்குறிப்பில் இருந்து ராகுல் பேச்சுகள் நீக்கப்பட்டுவிட்டதால் மட்டும் உண்மை மறைந்துவிடாது என மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் பேச்சுகள் நீக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது எனவும் கூறினார்.