Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு; எம்.ஆர்.விஜயபாஸ்கர் தம்பி மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு: 2 நாள் விசாரணை முடிந்தது

கரூர்: கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷிடம் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலம் அபகரிப்பு புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது உறவினர் பிரவீன்(28), உடந்தையாக இருந்த வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இந்த வழக்கில் விஜயபாஸ்கரின் தம்பி சேகரின் முன்ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து சேகரை சிபிசிஐடி போலீசார், கரூர் சின்னாண்டாங்கோயில் பகுதியில் கடந்த 2ம் தேதி கைது செய்தனர். மேலும் தோட்டக்குறிச்சியை சேர்ந்த செல்வராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், நிலமோசடி வழக்கு சம்பந்தமாக சேகரை 2 நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். கரூர் காந்தி கிராமத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு போலீசார் அழைத்து வந்து 2 நாட்களாக விசாரித்தனர். விசாரணை முடிந்து கரூர் கோர்ட்டில் சேகரை சிபிசிஐடி போலீசார் நேற்று மாலை ஆஜர்படுத்தினர். பின்னர் கோர்ட் உத்தரவின்படி சேகரை மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.