ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காணச்செல்லும் ரசிகர்கள், தங்கள் டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்: சென்னை மெட்ரோ நிறுவனம்
சென்னை: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை காணச்செல்லும் ரசிகர்கள், தங்கள் டிக்கெட்டை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வருகின்ற மார்ச் 23, 2025ம் தேதி நடைபெற உள்ள “IPL 2025” கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
ஸ்பான்சர் செய்யப்பட்ட IPL போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் பயணச்சீட்டுகளில் (both Digital & Physical) உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் (நடைமேடைகள் 1 & 2) வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். IPL 2025 போட்டியை காண செல்பவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் கேட்டுக்கொள்கிறது


