Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

முதலீட்டில் அசத்தும் தமிழ்நாடு அரசு.. 5 மாதத்தில் ரூ.7 லட்சம் கோடி முதலீடு: 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் ரூ.7 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னையில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ.6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 5 மாதத்தில் ரூ.7 லட்சம் கோடிக்கு முதலீடுகள் கிடைத்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகிறது.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் பிக்சல் ஸ்மார்ட் போன், டிரோன் உள்ளிட்ட சாதனங்கள் தயாரிக்க கடந்த வாரம் தமிழ்நாட்டில் நுழைந்தது. மேலும் டெஸ்லா ரைவல் வின்பாஸ்ட், டாடா பவர், ஃபாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ், பெகட்ரான் ஆகிய முன்னணி நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் முதலீடுகள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு, தேவையான அனுமதிகளைப் பெறுவதற்கும், முதலீட்டளார்கள் எளிதாகச் செயல்படுவதற்கான நடைமுறைகளை அரசு நெறிப்படுத்தியுள்ளது. குறிப்பாக பொறியியல், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித் துறைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.