Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிப்பு

மும்பை: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் 57 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்தியா பதிலடி கொடுத்தது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் மூண்டது. இந்த நிலையில், ஹிமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே விளக்குகள் திடீரென அணைக்கப்பட்டன.

தொழில்நுட்ப பிரச்னை என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டாலும், எல்லையில் அதிகரித்துள்ள போர் பதற்றம் காரணம் என்பது தெரியவந்தது. பின்னர் போர் பதற்றம் காரணமாக வீரர்களின் பாதுகாப்பு மற்றும் ரசிகர்களின் நலன் கருதி போட்டி ரத்து செய்யப்பட்டது. தர்மசாலாவில் இருந்த டெல்லி, பஞ்சாப் வீரர்கள் பேருந்து மூலம் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டனர்.

எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் எஞ்சிய ஆட்டங்கள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு விடையளிக்கும் வகையில் பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகிகள் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; "ஒரு வாரத்திற்கு ஐபிஎல் போட்டிகளை நிறுத்திவைக்கப்படுகிறது. இந்த முடிவினை ஐபிஎல் போட்டிகளை நிர்வகிக்கும் குழுவினர் எடுத்துள்ளனர். அனைத்து அணிகளின் பிரதிநிதிகள், வீரர்களின் நிலைமை, ஒளிபரப்பாளர்கள், விளம்பரதாரர்கள், ரசிகர்களின் நன்மைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் பிசிசிஐ இந்திய ராணுவத்தினர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது. இந்தச் சவாலான காலக்கட்டத்தில் பிசிசிஐ நாட்டிற்கு ஆதரவாக இருக்கிறது. இந்திய அரசாங்கம், ராணுவத்துடன் துணை நிற்கிறோம். ஆபரேஷன் சிந்தூரில் நாயகர்களாக இருக்கும் ராணுவத்தின் தைரியம், சுயநலமற்ற சேவைக்கு சல்யூட்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடக்க வேண்டிய 58வது ஆட்ட 13லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆப், ஒரு பைனல் என எஞ்சிய எல்லா ஆட்டங்கள் ஏற்கனவே அறிவித்த அட்டவணைப்படி நடக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில், குஜராத் டைட்டன்ஸ் முதலிடத்திலும், ஆர்சிபி 2ம் இடத்திலும் பஞ்சாப் கிங்ஸ் 3வது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் 4வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.