Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் இன்று மாலை முதல் ஆக.15-ம் தேதி வரை பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் இன்று மாலை முதல் ஆக.15-ம் தேதி வரை பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட உள்ளது. நாட்டின் 78-வது சுதந்திர தினம் வரும் வியாழக்கிழமை (ஆக.15) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோல, சென்னை உள்பட முக்கிய ரயில் நிலையங்களிலும் இன்று மாலை முதல் ஆக.15-ம் தேதி வரை பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்படவுள்ளது. தமிழக ரயில்வே காவல் துறையைப் பொருத்தவரை, சென்னை ரயில்வே காவல் மாவட்டம், திருச்சிராப்பள்ளி ரயில்வே காவல் மாவட்டம் என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே காவல் மாவட்டத்தில் சென்னை கடற்கரை முதல் விழுப்புரம் வரையும், சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் மார்க்கமாக உதகை வரையும் காவல் எல்லையாக உள்ளது. இதுபோல, திருச்சிராப்பள்ளி ரயில்வே காவல் மாவட்டத்தில் விழுப்புரம் முதல் கன்னியாகுமரி வரை எல்லைப்பகுதியாக உள்ளது. இந்த இரண்டு ரயில்வே காவல் மாவட்டங்களிலும் உள்ள ரயில் நிலையங்களில் மொத்தம் 1,500 ரயில்வே போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுடன் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் (ஆர்.பி.எஃப்) இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

சென்னை பிரிவில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், திருவள்ளூர், அரக்கோணம், சேலம், கோயம்புத்தூர் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ரயில்வே போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ரயில்வே தண்டவாளங்களில் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபடுவது, ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேரமா மூலமாகவும் பார்வையிடுவது போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். இது குறித்து ரயில்வே காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: "சுதந்திர தினத்தை முன்னிட்டு, அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில், ரயில் நிலையங்களில் இன்று மாலை முதல் ஆக.15-ம் தேதி வரை பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். ரயில்வே தண்டவாளங்களில் ரோந்து, துப்பறியும் நாய்கள் மூலமாகவும், வெடிகுண்டு சோதனை பிரிவு நிபுணர்கள் மூலமாகவும் தீவிர சோதனை மேற்கொள்ளப்படும். பயணிகளின் உடமைகள் முழுமையாக சோதனை நடத்திய பிறகு, ரயில் நிலையத்துக்கு உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். எனவே, பயணிகள் 45 நிமிடங்களுக்கு முன்பாக ரயில்நிலையம் வர அறிவுறுத்தப்படுகின்றனர்.” என்று அவர் கூறினார்.